பிழைகலாளான(து) பிரதி

Jul 31, 2008

தூதாசபானியிடம் நேற்று ஒரு சொல்லை வெறும் சொல்லாகவே உணருவதெப்படியென்பதை சொற்களால் விளக்கியபடியே தூங்கிப்போனேன். அவள் வெறும் சொல்லாகவே மாறி மூடியிருந்த சன்னலின் வழி வெளியேறிப்போனாள். அவள் கனவில்,சொற்கள் கடவுளை உருவாக்கின.சொற்களால் கடவுள் உருவாக்கபட்டார்.சொற்களை கடவுளை உருவாக்கினார்.என் கனவில்,சொற்கள் வேதங்களை உருவாக்கின.சொற்களால் வேதங்கள் உருவாக்கப்பட்டன.சொற்களை வேதங்கள் உருவாக்கின.

வாசகமனம் உருவாக்கும் பிரதியும்,பிரதி உருவாக்கும் வாசகமனமும் ஒரே நுழைவாயிலில்தான் நரகத்தை அடைவதாகவும், அவ்வாறு வருகையில் சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலையில் இருந்து தனது துரிதஸ்கலித பிரச்சினைக்கு மருந்து வாங்கிவரும்படியும் ஆண்கடவுள் கூறினான்.ஆனால் மூன்று கோப்பை மது இருந்தால் தன்னால் 60 நிமிடங்கள் இயங்கமுடியும் என்றும் தான் இதன் மூலம் கடவுளை வென்றுவிட்டதாகக் கூறி பூமி அதிரச்சிரித்தான் ஆதிமூலம்.

தேவி அவளது திருமணத்திற்கு பிறகு இதுவரை 31முறை மட்டுமே வெளியிடங்களுக்குச் சென்றிருப்பதாகவும்,அதில் 7 முறை திரு(?)மண வீடுகளுக்கும், 24 முறை மரணவீடுகளுக்கும் சென்றதாகக்கூறினாள். ஆனால் இதுவரை அவள் 365 ஆண்களைப் புணர்ந்தும்,புணர்ச்சிக்குபின் அவர்களது குறிகளை வரவேற்பறையில் தன் கணவனின் பார்வைக்கு வைத்தும் பழிவாங்கிக்கொண்டிருக்கிறாள்.

பின்னிரவில் இருசக்கரவாகனத்தில் பயணிக்கையில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளாவன.
1) முன்னே செல்லும் வாகனத்தின்மீது மோதலாம்.
2) எதிரே வரும் வாகனத்தின்மீது மோதலாம்.
3) பின்னே வரும் வாகனம் மோதலாம்.
4) எதிரே வரும் வாகனம் மோதலாம்.
5) வரும் வாகனம் மோதலாம்.
6) வாகனம் மோதலாம்.
7) மோதலாம்
8) தலாம்
9) லாம்
10) ம்
இரவுநேரத்தில் சாலையில் இவ்வளவு பெரிய பள்ளம் இருக்குமென்று எவன் கண்டது?மண்டை உடைந்துபோனது.

விதவிதமான கத்திகளை கையாள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்,அதிலும் அந்த பச்சைக்கைப்பிடி வைத்த கத்தியை.அது எனக்கு சுளைகள் நீக்கப்பட்டு தூக்கியெறியப்பட்ட பலாப்பழத்தின் நடுவே கிடைத்தது .பேருந்தின் இருக்கையில் பின்புறம் தலைசாய்த்து படுக்கும்போது கவனித்திருக்கிறீர்களா?கழுத்து கத்தியால் அறுக்கப்படுவதெற்கென்றே உருவானதுபோலிருக்கும். அந்த பச்சை கைப்பிடி வைத்த கத்தி இல்லாமற்போனதால் என்னுடைய தற்கொலை தள்ளிபோய்க்கொண்டிருக்கிறது. .அது இன்று பரசுராமனிடம் இருக்கிறது உபயோகங்களின்றி..உங்களில் திறமையாக திருடத்தெரிந்தவர்கள் அந்த பச்சைக்கைப்பிடிக்காகவேனும் எனக்கு திருடித்தாருங்கள்..அவர்கள் அனைவரும் கையுயர்த்தி சொன்னார்கள் நிச்சயம் பச்சைக்கைப்பிடி கத்தியை திருடுவதாக.

Read more...

நீ இருக்கக்கூடும் என் கவிதைகளில்..

Aug 19, 2007

நீ என்னை தனித்தன்மையானதொரு கவிதை
எழுதச்சொல்லி வற்புறுத்துகிறாய்
நகுலனோ
எதிர்வீட்டு தூதா சபானியோ இல்லாது
உனக்கென ஒரு பிரத்யோக கவிதை வேண்டுமெனவும்
அது எப்படி இருக்கவேண்டுமெனவும்
விவாதிக்கிறாய்
யாருமற்ற உலகத்திலும்
யாரும் இல்லையென்ற ஏக்கமோ
யாரேனும் இருந்திருக்கலாமென்ற நிராசையாகவோதான்
இருக்குமென் கவிதை

அது உனக்கானதாயிருக்காது

Read more...

நினைவிலிருந்து வழியும் நீ...

Jul 7, 2007

இரகசியங்களடங்கிய
இப்பின்னிரவின்முடிவில்
வந்திறங்குகிறது உன் நினைவுகள்
மலரின் மீதமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல்.
வண்ணங்கள் உதிர்ந்த இருட்சுவரிலிருந்து
பிரதியெடுத்த ஓவியமென
வந்திருக்கிறாய் நீயும்.
என் நிலைக்கண்ணாடியில் விழும்
உங்கள் பிம்பங்கள் பொருந்தாதுகண்டு
அதிர்ந்து நிற்கிறேன் நான்.
வெகுசிரத்தையோடு கவனிக்கிறது
காலம்

Read more...

மிஞ்சிய தேநீரும்,கடவுளின் நண்பனும்*

May 20, 2007

அவனும் கடவுளும் நண்பர்கள்
அவருடைய ஒய்வுநேரங்களிலும்
அவனுடைய தனிமையிலும்
உரையாடுவதாய்ச் சொல்லிருக்கிறார்

அவனிடம்

இன்றைய தேநீர்நேரத்தில் வருவதாய்
ஒத்துக்கொண்டிருக்கிறார்
அவனுடைய கேள்விகளை எப்படி
எதிர்கொள்வதென்ற கவலையோடு.
அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்
கடவுளிடம் ஒரு மலர்ந்த புன்னகை
வேறுவழியற்று நான்கு விடைகளைச்சொல்லி
சரியான பதில் கேட்டான்
இன்னும் பெரிய புன்னகை.
நான்கில் ஒன்றைச்சொல்லி
இது சரிதானாவென்றான்
அதே புன்னகை
மிஞ்சிய தேநீரை அவருக்குக் கொடுத்தான்
நாளைவரச்சொல்லி கதவை மூடினான்

*நண்பன் பாரதிக்கு..

Read more...

வெட்டவெளியில்
ஒற்றைமரத்தின் நிழலில்
நான்
யார் நிழலுக்காய் மரம்?

Read more...

நாம் நிகழ்ந்த காலம்

May 17, 2007

நாம் கடைசியாய் சந்தித்துப் பிரிந்த அதே இடத்தில் மீண்டும் சந்திப்பது மிகுந்த தற்செயலானதே...நீ ஒரு எளிய புன்னகையுடன் உறுதியாய் எனை எதிர்க்கொண்டாய்..என்னுடைய நலங்களை விசாரிக்கும் உன்னிடம் என் தடுமாற்றங்களை மறைத்துக்கொண்டு நான் நன்றாயிருப்பதைச் சொன்னேன்...இத்தனை ஆண்டுகளில் துளி கூட மாற்றங்கள் ஏதுமற்ற உன் கண்கள் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது.ஆச்சரியம் விலகாமலே யோசிக்கிறேன் எப்படி உன் கண்களை ஆழ்ந்து பார்த்தபடியே நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை..

நீ என் கண்களை ஆழ்ந்து பார்த்தபடியே பேசிக்கொண்டிருக்கிறாய்.நீ இன்னும் மாறவேயில்லை..என் கண்களின் ஊடாய் மனதை படிக்கமுயல்கிறாய்..நீ நிச்சயம் என்னுள் சலனங்களை உருவாக்குகிறாய்.இந்த சந்திப்பை எதிர்கொள்வதெப்படி எனச்செய்திருந்த திட்டங்களனைத்தையும் கண்ணாடியைப்போல் உடைத்தெறிந்துவிட்டு சிறுகுழந்தையாய் புன்னகைக்கிறாய்...உடைந்த கண்ணாடித்துண்டுகளால் உடலெங்கும் உதிரம் பெருக உனை இரசிப்பதன்றி என்ன செய்யச்சொல்கிறாய் என்னை?

என்ன செய்யச் சொல்கிறாய் என்னை? என் மனதின் இரகசிய அறைகளில் வாழ்வெனக்கு அளித்த அழகிய பரிசுப்பொருளென பத்திரப்படுத்தியிருந்தேன் உன் நினைவுகளை..சிறுகாற்று நுழைந்து மூங்கில் காட்டை இசையால் நிறைப்பதை போல் உன் நினைவுகளால் என்னை நிறைக்கிறாய் உன் வருகையால்..

என் அவலங்கள் நிறைந்த, ஏற்றுக்கொண்ட வாழ்க்கையில் ஆழ்ந்த உறக்கத்தின் நினைவுக்குக் கொண்டுவர முடியாக் கனவினைப் போன்றது நான் விரும்பிய வாழ்வு..உன் வருகையால் கனவினை அறிந்து கொள்ள முடியாத ஏக்கம் என்னுள் எழுகிறது.. இதே இடத்தில் வேறொரு நாள் நீ எனக்குப் பரிசளித்த கழுத்துச்சங்கிலியை அறுத்துக்கொடுத்ததால் உருவான கழுத்துகாயம் என் திருமணப் புகைப்படங்களில் தங்கிவிட்டது நம் நினைவுகளின் வடுவாய்...

யார் விருப்பங்களுக்கும் உட்படாது வாழ்வெனும் நதி தன் வழியே போய்க்கொண்டிருக்கிறது. நம் இரகசியக்கனவுகளாலும், விருப்பங்களாலும் ஏராளமான கிளைநதிகளை உருவாக்கிக் கொள்கிறோம்.உன் மீதான என் இரகசியக்கனவொன்று கிளர்ந்தெழுந்து உருவாக்கிக்கொண்ட இக்கிளைநதியின் முடிவில் சிறு சுடர்விளக்கேந்தி நிற்கிறாய் என் மீதான உன் இரகசிய கனவொன்றுக்கு வழிகாட்டியபடி.

உனக்கு அவ்வாறு நான் வழிகாட்டியிருக்ககூடாது. என் தடுப்பாற்றல் முற்றும் செயலற்றுப்போனதொரு கணத்தில் நிகழ்ந்துவிட்டது என் இரகசிய கனவொன்றில் உனது வருகை.இப்பொழுது, நீ எளிய ஆனால் உறுதியான புன்னகையுடன் அதனை கடந்து போகிறாய்.





அறிந்துகொள்ள முடியாத
பெருங்கனவொன்றின் விளிம்பில்
காலத்தால் கட்டமைக்கப்பட்ட
இம்மரத்தின்கீழ் நிற்கிறோம்
கிளைகள் ஒளித்திருந்த
நம் இறந்தகாலம் அம்மரத்தின்
விழுதுகள் வழி நிரப்புகிறது
நம்மிடையேயான இடைவெளியை
காற்றில் பரவுகிறது
உன் கூந்தல்மலர் மலர்வதின் அதிர்வு
அம்மாவென்றொரு குரலில்
திடுக்கிட்டு கலைகிறது
நாம் நிகழ்ந்த காலம்.

Read more...

என் எதிரியாயிரு

Apr 12, 2007

நீ யாரென்பது
எனக்குத்தெரியாது
நீ என்னைவிட
நிச்சயம் மேம்பட்டவன்
என்னுடைய எதிரியாய்
உன்னைத்தேர்ந்தெடுத்துவிட்டேன்
யாரும் காயப்படுத்தமுடியாத
என் தனிமையுடன்
உனக்காக காத்திருக்கிறேன்.
சீக்கீரம் வா இல்லையெனில்
திடீரென முடிந்துவிடும்
ஒருகணத்தில் இறந்துவிடுவேன்

Read more...

  © Blogger template Brownium by Ourblogtemplates.com 2009

Back to TOP